மருத்துவரின் அறிவுரையின்றி கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம் – ஆட்சியர் அறிவுரை…
பெரம்பலூர்
காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவரின் அறிவுரையின்றி கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி உட்க்கொள்ளக் கூடாது. என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடைப்பெற்றது.
இந்த முகாமில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்தார் மாவட்ட ஆட்சியர் வே,சாந்தா.
அப்போது அவர், “மாணவர்கள் மற்றும் மக்கள் தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை மூன்று நாள்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பொடி கொண்டு தேய்த்து சுத்தம் செய்து, உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும்.
வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தி, அதில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
மேலும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவரின் அறிவுரையின்றி கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி உட்க்கொள்ளக் கூடாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டெங்கு கொசுப்புழுவை ஒழிக்க தங்களது வீடு தேடிவரும் களப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
இந்த முகாமில், துப்புரவுக் காவலர்கள், ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி. தயாளன், இளங்கோவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.