பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு – நீதிமன்றம் உத்தரவு…
விழுப்புரம்
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, செம்மண் குவாரி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது விழுப்புரம் நீதிமன்றம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரி நடத்தியதில் அரசிற்கு இழப்பு ஏற்படுத்திய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி உள்பட எட்டு பேர் மீதான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி (பொறுப்பு) யு.மோனிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோதகுமார், லோகநாதன், கோபிநாத், சதானந்தம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) யு.மோனிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. இதற்காக, அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த வழக்கின் விசாரணையையும் நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.