ஐரோப்பிய ஓபன் கிளைமாக்ஸ்: திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை சாம்பியன் வென்றது…
ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி இணை வாகைச் சூடி அசத்தினர்.
ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி இணை, மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸால்ஸ் - சிலியின் ஜூலியோ பெரால்டா இணையுடன் மோதியது.
இதில், 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் சான்டியாகோ கொன்ஸால்ஸ் - ஜூலியோ பெரால்டா இணையை வீழ்த்தியது திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை.
வெற்றிக்குப் பிறகு திவிஜ் சரண் கூறியது:
"இந்த ஆண்டின் இறுதியில் ஏடிபி போட்டியில் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரு மாதங்கள் கடினமானதாக இருந்தது. எனக்கான வெவ்வேறு இணையுடன் விளையாடினேன். எனது விளையாட்டை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் இருந்தது.
லிப்ஸ்கியும், நானும் சிறந்த இணையாக மேம்பட்டுள்ளோம். இந்தப் போட்டியுடன் லிப்ஸ்கி நாடு திரும்புகிறார். நான் அடுத்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது' என்றார்.