Asianet News TamilAsianet News Tamil

கடைசி 2 பந்து இருக்க, பிராவோவிடம் தோனி பேசியது என்ன? திட்டத்தை மாற்றி வெற்றியை வசப்படுத்திய ”தல”

dhoni advised bravo in a last minute
dhoni advised bravo in a last minute
Author
First Published Apr 23, 2018, 1:44 PM IST


ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, அம்பாதி ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் 182 ரன்களை குவித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சனும் டுபிளெசிஸும் களமிறங்கினர். வாட்சன் 9 ரன்களிலும் டுபிளெசிஸ் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரெய்னாவும் ராயுடுவும் சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் கடந்தனர். அதிரடியாக ஆடிய ராயுடு, 37 பந்துகளுக்கு 79 ரன்களை குவித்தார். சுரேஷ் ரெய்னா 54 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அம்பாதி ராயுடுவின் அதிரடி பேட்டிங்கால் சென்னை அணி 20 ஓவருக்கு 182 ரன்கள் குவித்தது. 

183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கி புயி மற்றும் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். ரிக்கி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் 0 ரன்னில் வெளியேறினார். தீபக் ஹூடாவும் 1 ரன்னில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் வில்லியம்சனும் ஷாகிப் அல் ஹாசனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர்.

27 ரன்களில் ஷாகிப் அல் ஹாசன் வெளியேறினார். இதையடுத்து வில்லியம்சனுடன் யூசுப் பதான் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து யூசுப் பதானும் 45 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணியிடமிருந்து ஆட்டம், சென்னையின் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் மூன்று பந்துகளில் சஹா வெறும் 3 ரன்களே எடுத்தார். இதையடுத்து 3 பந்துகளுக்கு 16 ரன்கள் என்ற கடினமான நிலை உருவானது. 4வது பந்தை எதிர்கொண்ட ரஷீத் கான் சிக்ஸர் விளாசினார். இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்பானது. சென்னை அணியின் கேப்டன் தோனியும் கடைசி ஓவரை வீசும் பிராவோவும் சற்றே அதிர்ந்தனர்.

இக்கட்டான சுழல்களில் பெரும்பாலும் பிராவோவையே நம்பும் தோனி, நேற்றும் பிராவோவையே நம்பினார். ரஷீத் கான் நான்காவது பந்தில் சிக்ஸர் அடிக்க, 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, சிறிது நேரம் பிராவோவுடன் பேசிய தோனி, ஆலோசனைகளையும் வழங்கினார். ஐந்தாவது பந்தை பவுண்டரி அடித்த ரஷீத் கானால் கடைசி பந்தில் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின் பேசிய தோனி, அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கும் சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். அப்போது இரண்டு பந்துகள் இருக்கும்போது பிராவோவின் திட்டத்தை மாற்றச் சொன்னேன். வேறு மாதிரி போட சொன்னேன். அதனால்தான் வெற்றி பெற முடிந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம். இந்த பிட்ச் முந்தைய ஐபிஎல்லை விட நன்றாக இருந்தது. பேட்ஸ்மேன்கள், நாக் அவுட்டை நோக்கி நகரும் போது பந்துவீச்சாளர்கள் புதிய திட்டங்களுடன் வருவதை பார்க்க முடியும். அதனால் பெரிய ஸ்கோர் எடுப்பது எளிதானதல்ல. தீபக் சாஹரும் ஷர்துல் தாகூரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். அவர்களும் தவறி ழைக்கிறார்கள். தீபக், சிறப்பாக பந்துகளை ஸ்விங் செய்கிறார். ஷர்துலுக்கு சில போட்டிகள் மோசமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் வித்தியாசமான பந்துகளை வீசுகிறார். அவர்கள் அழுத்தமான வீரர்களாக வருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios