“இந்திய அரசியலில் நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி தான்...” அலறவிட்ட “நமது அம்மா” நாளேடு!
பாஜக- அதிமுக உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டங்களும் நடத்தவுள்ளன.
இந்நிலையில் காவிரிப் போராட்டங்கள் குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித் தலைவி அம்மாவில் நேற்று வெளிவந்துள்ள கட்டுரையில், "தமிழகத்தை ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற போராட்டங்களை திமுக திட்டமிட்டு நடத்தி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுயநலங்களோடு திமுக நடத்துகிற போராட்டங்களை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தமிழக மக்கள் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழகத்தை ஆளும் அதிமுகவும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்னையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் திமுக, தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது" என்றும் கூறப்பட்டுள்ளது. எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக. - பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது.
மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது. இந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத் திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்" என்றும் கூறப்பட்டிருந்தது.