உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம்… நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றம் !!
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் எந்தவித சிக்கலும் இன்றி நிறைவேறியது.
நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா மீதான விவாதம் நேற்று மாலை 6 மணியில் இருந்து நடைபெற்றது. சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் இரவு 10 மணிக்கு மேல் மக்களவைக்கு வந்தனர் . இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றம் அடையும்.
இந்நிலையில், இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும் எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது.இந்த அசதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தார்.