ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய 2 பேர் கைது! ரூ.20 லட்சம் பறிமுதல்!
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், 19 ஆம் தேதி அன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை வேகப்படுத்தி உள்ளனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன் சார்பாக தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.
பணப்பட்டுவாடா காரணமாக கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்படக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது. ஆனாலும், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் பணம் வழங்கியவர்களை, காவல்துறையிடம் பிடித்தும் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர், திருவள்ளூவர் நகர், முத்தாலம்மான் கோவில் தெருவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற அதிமுகவினர் ஒரு வீட்டில் இருந்து மூன்று பைகளில் இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.