ராகுல் காந்தி கொலைக்கு காரணம் யார் ? உளரிக் கொட்டி பல்பு வாங்கிய அமைச்சர் !!
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி கொலை செய்யப்பட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளரிக் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர்களிலேயே ஏட்டிக்கு போட்டியாகவும், அடிக்கடி உளரிக் கொட்டுபவராகவும் பெயரெடுத்தவர் திண்டுக்கல் சீனிவாசன். நேற்று முன்தினம் வேடசந்தூரில் பேசிய அவர், வாஜ்பாயி தாக்கல் செய்த பட்ஜெட் மிக அருமையாக உள்ளது என்று உளரினார்.
இதற்கு முன்பு பிரதமர் நரசிம்மராவ் என்று ஒரு முறை மேடையில் பேசினார். அவர் தவறாக பேசும்போதெல்லாம் அமைச்சரின் பி.ஏ. ஒருவர் அருகில் நின்று அவரது தவறை சுட்டிக்காட்டுவார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடியில் அதிமுக பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, கொலையாளிகளான ஒற்றைக்கண் சிவராஜன் மற்றும் தனு ஆகியோர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இருப்பது போன்று திமுக பத்திரிக்கையில் படம் வெளியிடப்பட்டது. ஆனால் அது ஒரு பொய்யான போட்டே.
அப்போதே திமுக தலைவராக கருணாநிதி பயங்கரமான பொய் சொல்லுவார். அவரைப் போன்றே அவரது மகன் ஸ்டாலினும் பொய் சொல்லுகிறார் என பேசினார். ஆனால் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்று சொல்வதற்குப் பதிலாக ராகுல் காந்தி…ராகுல் காந்தி என்றே திரும்பித் திரும்ப பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சரின் பி.ஏ, தவறை சுட்டிக் காண்பித்தார். அதன்பிறகே அமைச்சர் திருத்திக் கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இது போன்று உளரிக் கொட்டி வருவதை நெட்சன்களும் கிண்டல் அடித்து வருகின்றனர். அவர் இது போன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.