ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்..? பிடியை இறுக்கும் மத்திய அரசு..!
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே, ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், ப.சிதம்பரத்தை ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வந்தனர். இந்நிலையில், அவரது விசாரணை காவல் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நீதிமன்றம் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பில் இருந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற டெல்லி சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக வரும் 24-ம் தேதி ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் மேலும் சிக்கல் நீடித்துள்ளது. இதனிடையே, ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ளது.