எச்.ராஜா பதிவுக்கு வெட்கப்பட்டால் கண்டியுங்கள்...! இல்லையெனில் உங்கள் அரசியல் தரம் சந்தேகிக்கப்படும்...! பாஜகவை சாடும் சரத்குமார்...!
எச்.ராஜாவின் அநாகரிகமான பதிவுக்கு பாஜக தலைமை வெட்கப்பட வேண்டும் என்றும் அவரைக் கண்டிக்காவிட்டால் பாஜகவின் அரசியல் களமும் தரமும் அவ்வளவுதான் என்று மக்கள் முடிவு செய்து விடுவார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள்! சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சென்னை, ராயப்பேட்டை மேம்பாலத்தில் எச்.ராஜாவின் உருவப்படத்தை கட்டி தொடங்கவிட்டுள்ளனர்.
எச்.ராஜா பதிவு குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, எச்.ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பதிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வேதனை தெரிவித்திருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் பெண்ணின் மானம் காக்கப்பட வேண்டும். பெண்ணின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் எந்த காலத்திலும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அது மிக தவறு என்றார்.
இந்த நிலையில் சமக தலைவர் சரத்குமார், மூன்றாம் தர கருத்துக்களை எச்.ராஜா உடனடியாக நிறுத்தாவிட்டால், கட்சியின் தலைமை அவரை கண்டிக்காவிட்டால், உங்கள் அரசியல் கலமும் தரமும் அவ்வாறுதான் என்று மக்கள் முடிவு செய்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவு, அவர் தலைமைக்கு ஒப்புதல் என்றாம் நாம் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும் என்றார். நாட்டை ஆளும் கட்சியின் தலைவர்களின் தரம் இது என்றால், இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்த நாம்தான் மாபெரும் தவறு இழைத்திருக்கிறோம்.
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே பேசி, முரணான கருத்துக்களைப் பதிவுசெய்து, நாட்டின் முக்கிய பிரச்சனைகளைத் திசை திருப்ப அந்த கட்சி முயற்சிக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளுக்குநாள் இதுபோன்ற அநாகரிக அரசியல் பேச்சுகள் அதிகரித்துக் கெண்டே இருக்கின்றன. இதுபோன்ற அருவருக்கத்தக்க மூன்றாம் தர கருத்துக்களை எச்.ராஜா நிறுத்தாவிட்டால், கட்சியின் தலைமை அவரை கண்டிக்காவிட்டால், உங்கள் அரசியல் களமும், தரமும அவ்வாறுதான் உள்ளது என்று மக்கள் முடிவு செய்து விடுவார்கள் என்று சரத்குமார் காட்டமாக கூறியுள்ளார்.
பெண் இனத்தை இழிவுபடுத்தயி ஒருவர், உங்களுடன் அரசியல் களத்தில் இருப்பது பாஜக தலைமைக்கு தகுதிதானா? தமிழக பாஜக தலைவராக ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பெண் இனத்தை பற்றி அவரின் அநாகரிகமான பதிவுக்கு பாஜக தலைமை வெட்கப்பட வேண்டும். இவரின் பதிவால் பாஜக தலைமைக்கே தலைகுனிவாகும் என்று சரத்குமார், அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.