தகாத உறவுன்னா... ஆண்களை மட்டும் தண்டிக்கணுமா..? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
தகாத உறவு என்பதற்காக, ஆண்களை மட்டும் தண்டிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ஒரு பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். முறை தவறிய உறவு வைத்த குற்றத்திற்காக ஆண்களை மட்டும் தண்டிக்கும் சட்டப் பிரிவுக்கு எதிராக ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஜோசப் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது... இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, முறை தவறிய உறவு என்பது குற்றம் என்று கருதப் படுகிறது. இந்த நிலையில், ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் மீது கணவர் புகார் அளித்தால் மட்டுமே, அது குற்றச்சாட்டாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் ஆண்கள் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இது ஆண் பெண் சமத்துவமின்மையைக் காட்டுகிறதே... ஏன் என்று கோரப் பட்டிருந்தது.
அவரது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம். மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவு குறித்து இன்னும் 4 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.