குட்நியூஸ்.. சென்னை கடற்கரை டூ திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியது! கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை நிர்வாக காரணங்களுக்காக ரயில் சேவை நீட்டிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக தொடங்கியது.
tiruvannamalai
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் - காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக, தாம்பரம் ரயில் சேவை தடைப்பட்டது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெற்றும் நிறுத்தப்பட்ட தாம்பரம் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பக்தர்கள், வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், 18 ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.
சென்னை கடற்கரையில் இருந்து மே 2-ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை காலை 9.50 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டன. ஆனால், ரயில் சேவை நீட்டிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக நேற்று முதல் ரயில் சேவை தொடங்கியது.