அஜித்தின் 'விசுவாசம்' எப்படி பட்ட கதை..! கசிந்தது தகவல்..!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைய உள்ள திரைப்படம் பற்றியும் அதன் கதை பற்றியும் தற்போது பல தகவல்கள் உலவி வருகின்றன. சிவா அஜித்தை வைத்து முதலாவதாக இயக்கிய வீரம் படத்தை அண்ணன் தம்பிகளின் பாசம், செண்டிமெண்ட் , காதல் காமெடி கலந்து இயக்கி இருந்தார். இந்தப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக வெளிவந்த வேதாளம் படத்தில் தங்கையின் செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி மற்றும் தெறிக்கும் வசனங்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்திருந்தார்.
மூன்றாவதாக வந்த விவேகம், படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து அஜித்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்று காண்பித்திருந்தார் சிவா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றது.
இந்நிலையில் இன்று அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பை முன்பே வெளியிட்டு, அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்தப் படம் எப்படிப் பட்ட படம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது... அதன்படி இப்படத்தின் கதை நகைச்சுவைக் கதையாகவும், குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளரைத் தவிர விவேகம் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தான் இப்படத்தில் வேலை செய்ய இருக்கிறார்களாம்.
அதோடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக கமிட் செய்ய படக்குழு முயற்சி செய்து வருவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.