வருடா வருடம் ஓட்டு போடுவீங்களா.. அப்போ பயர்லாம் விட்டோம்.. நடிகை ஜோதிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
சினிமா நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான நடிகை ஜோதிகா நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாததுக்கு விளக்கம் அளித்திருந்த நிலையில் நெட்டிசன்கள் ஜோதிகாவை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை செலுத்தினர் என்றே கூறலாம். நடிகர் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பலரும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வாக்களித்தனர். நடிகர் சூர்யா, அவருடைய சகோதரர் கார்த்தி, தந்தை சிவகுமார் ஆகியோரும் வாக்களித்தனர்.
ஆனால் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா வாக்களிக்க வரவில்லை. பிறகு நடிகை ஜோதிகா நேபாளத்துக்கு சுற்றுலா செல்லும் வீடியோ அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டார். நெட்டிசன்கள் வாக்களிக்க உங்களுக்கு நேரமில்லையா? என்று பல கேள்விகளால் வறுத்தெடுத்து விட்டனர். தற்போது தனது புதிய படமான ஸ்ரீகாந்த் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார் நடிகை ஜோதிகா.
தேர்தலில் வாக்களிக்க வராமல் இருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த நடிகை ஜோதிகா, “ஒவ்வொரு வருஷமும் ஓட்டுப் போடுறேன். இந்த தடவை மிஸ் ஆகிடுச்சு” என்று அதிர்ச்சிகர பதில் அளித்தார். உடனே உஷாரான பத்திரிகையாளர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் ஓட்டு போட முடியும் என்று கூற, “ஸாரி. நான் ஊரில் இல்லை, பர்ஷனல் விஷயம் காரணமாக ஓட்டுப் போட வரமுடியவில்லை” என்று கூறினார்.
பலரும் தனது ஜனநாயக கடமையாற்ற வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நிலையில் ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை நடிகை ஜோதிகாவுக்கு எதிராக தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்ட ஒருவர், தேர்தல் ஓட்ட பிக்பாஸ் ஓட்டுன்னு நினைச்சிட்டு போல... வருடா வருடம் ஓட்டு போடுமாம் இந்த தற்குறிக்குலாம் பயர்லாம் விட்டானுங்க” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், "2005 இல் ஆன்லைன் வாக்களிப்பைப் பயன்படுத்திய உலகின் முதல் நாடு எஸ்டோனியா? எந்த நாட்டில் ஓட்டு போட்டது என தெரியாமல் ஜோதிகா சூர்யா ரசிகர்கள் குழப்பம்" என்று கலாய்த்து உள்ளார்.
அதேபோல நடிகை ஜோதிகாவின் பேச்சு குறித்து காமெடியாக கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், "இந்தம்மா Twitter ல நடத்துற ஓட்டுன்னு நினைச்சிட்டாங்க. கேள்வியே தெரியல அப்புறம் பதில் எப்பூடீ" என்று நகைச்சுவையாக பதிவிட்டிருக்கிறார்.
மற்றொரு நெட்டிசன், "இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு செலவழித்த பணத்தில் எத்தனை குழந்தைகளை படிக்க உதவி செய்திருக்கலாம்" என்று கலாய்த்து உள்ளார். நடிகை ஜோதிகாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.