பாஜகவின் செயல் கண்டிக்கத்தக்கது: மெர்சலை ஆதரித்து கருணாஸ் அறிக்கை!
கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூர் போன்ற நகரங்களில் நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த்திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள்,கர்நாடகத்தில் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடந்து கொள்ள வில்லை என்றால் , 1991-இல்பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தைப் போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களைத் தாக்கிய கன்னட மொழி வெறி செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. “இந்திய ஒருமைப்பாட்டை வலிறுத்தும் மத்திய அரசு தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது.
அதே போல் தமிழ்நாட்டில் பா.ஜ.க., தமிழக தலைவர்கள் மெர்சல் திரைப்படத்தை கண்டித்து பேட்டியளிக்கின்றனர். கர்நாடகத்தினருக்கும் இவருகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.! 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா மீதான விமர்சனக் காட்சிகளுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மையை உரைக்கச் சொன்னால் ஏன் பா.ஜ.க. பதறுகிறது.
மக்களை பாதிக்கும் திட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வழியாக எதிர்ப்பு தெரிவிப்பது போல, ஒரு படைப்பாளி தனது படைப்பு வழியாக மக்களுக்கு சுட்டிக் காட்டுகிறார் அதில் என்ன தவறு இருக்கிறது. அதற்காக படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை வசனங்களை நீக்கச் சொல்லி பா.ஜ.க.வினர் வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு!
பா.ஜ.க.வின் இதுபோன்ற செயல்பாடு ஜனநாயக கொள்கைக்கு முரணானது.. பேச்சுரிமை, எழுத்துரிமை சுதந்திரத்தை பறிக்கும் செயல். கருத்துரிமைக்கு எதிராக விடப்படும் மிரட்டல்!
தணிக்கை செய்து வெளிவந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதெல்லாம் அடாவடித்தனத்தின் உச்சம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்!
அதே போல் தமிழ்நாடு அரசு விதித்த கட்டணங்களை தாண்டி திரையங்களில் அதிக விலை நிர்ணயத்து வசூலிக்கின்றனர். அதையும் விஜய் உள்ளிட்டோர் கவனித்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி கருணாஸ் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.