Asianet News TamilAsianet News Tamil

தலைமை ஆசிரியரை தாக்கும் திமுக கவுன்சிலரின் கணவர்: வைரலாகும் வீடியோ

அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார்.

இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பாஸ்கர் என்பவரை கண்டித்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர். அப்பொழுது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17 வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிக்குள் வந்த அந்த நபர், நீங்கள்ளாம் யார்ரா... இங்க எதுக்குடா பிரச்சன பண்றீங்க.. நீங்க இதையெல்லாம் கேட்க கூடாது என்று பள்ளி குழந்தைகளின் முன்பாகவே போதையில் அனைவரையும் ஒருமையில் அநாகரீகமாக பேசியுள்ளார். அப்போது, தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டி கேட்க வேண்டியது தானே என்று கேட்டதால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அவர், தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெறித்து தாக்கியுள்ளார்.

இதை அருகில் இருந்தவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பள்ளிக்குள் புகுந்து, தலைமை ஆசிரியரை பள்ளி நேரத்தில், மாணவர்களின் கண் முன்னே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories