Asianet News TamilAsianet News Tamil

திருச்செந்தூர் திமுக கவுன்சிலர் மீது புகார்; உண்மை என்ன?

திருச்செந்தூரில்  பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாகக் கூறி  தனியார் விடுதி உரிமையாளர் மனைவியுடன் நகராட்சி அலுவலக முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக நகரச்செயலாளர் வாள்சுடலை. இவரது தம்பி  கீழ வீர ராகவபுரம் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் டோல்கேட் அருகே விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராமகிருஷ்ணனின்  விடுதிக்கு பாதாள சாக்கடைத் திட்டத்தில் இணைப்பு வழங்க நகராட்சி 5-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர் மற்றும் நகராட்சி நிர்வாகம் ரூ 5-லட்சம் லஞ்சம் கேட்டதாக ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இத்துடன், விடுதி உரிமையாளர் ராமகிருஷ்ணன் தனது மனைவி சண்முகசுந்தரி உடன் நகராட்சி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி  தற்கொலைக்கு முன்றார்.  

அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதயனைடுத்து நகராட்சி அலுவலம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம்  அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். 

இதனையடுத்து நகராட்சி ஆணையர் வேலவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனியார் விடுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன் விதிமுறைகளை மீறி விடுதியில் கழிவறைகளை கட்டி  கழிப்பறை கழிவுகளை சாலையில் திறந்த வெளியில் விடுவது தெரியவந்தது. 

இதையடுத்து, விடுதியிலிருந்த கழிப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முறையான அனுமதியின்றி விடுதி கட்டப்பட்டுள்ளதாக விடுதியிலிருந்து பாதாள சாக்கடை திட்டத்திற்கு செல்லும் கழிவு நீர் இணைப்புகளையும் நகராட்சி நிர்வாகம் துண்டித்தது. 
 
இதனைத்தொடர்ந்து விடுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கேட்டு ராமகிருஷ்ணன் நகராட்சியில் பணம் கட்டியுள்ளார். ஆனால் அவரது விடுதி முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதால் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருதாலும், பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்ததாக நகராட்சி ஆணையர் வேலவன்  தெரிவித்தார். 

இந்த நிலையில் விடுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திமுக கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாகக் கூறி திமுக நகர செயலாளரின் தம்பி நகராட்சி அலுவலகம் முன்பு  மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories