Watch : 100 கிலோ ரோஜா பூக்கள் பயன்படுத்தி புற்றுநோய் ரிப்பன் வடிவம் உருவாக்கி பள்ளி மாணவி சாதனை!!

புதுச்சேரியில் விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் உலக ரோஸ் தினத்தை முன்னிட்டு 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 4000 சதுர அடியில் 100 கிலோ ரோஜா பூக்களை கொண்டு புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை வரைந்து உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
 

Share this Video

கனடாவைச் சேர்ந்த மிலாண்டா ரோஸ் என்ற சிறுமி புற்றுநோயால் உயிரிழந்தார். அவரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் உலக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்றைய கால கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சந்தோஷம், தைரியம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கிரஸ்ண்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் என். நசிரா பேகம் என்ற மாணவி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 80 அடிக்கு 50 அடி ( 4000 சதுர அடி ) அளவில் புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை, 100 கிலோ ரோஜா பூக்களை பயன்படுத்தி உருவாக்கி சாதனைப்படைத்துள்ளார்.

இதனை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், உப்பளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிபால் கென்னடி, ஏம்பலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லட்சுமிகாந்தன், ராக் கல்வி குழும நிறுவனர் முகமது பார்ரூக், ராக் குழும செயலாளர் அரிதேவன், கிரஸ்ண்ட் பள்ளியில் முதல்வர் ஜெ. தென்னரசு, துணை முதல்வர் எம்.சாதிக்அலி ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவியை பாராட்டி கவுரப்படுத்தினர்.

இந்த உலக சாதனை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் நிர்வாகி எஸ். பிரேம்குமார், அறக்கட்டளையின் செயலாளர் ஜி.கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video