Asianet News TamilAsianet News Tamil

குன்னூர் அருகே தொடர்ந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டும் காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம்

குன்னூர் அருகே கிராமப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக காட்டு யானைகள் இரு கூட்டங்களாக சுற்றி திரிந்தன. இதில் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை கடந்த வாரம் குன்னூர் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, கிளிஞ்சாடா, தூதூர் மட்டம் பகுதிக்கு மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் இருந்து ஐந்து காட்டு யானைகள் வந்து இரண்டு மாதங்களாக முகாமிட்டு இருந்தன. 

இந்த காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் ரேஷன் கடைகள், வீடுகள் என அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தி வந்த நிலையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மற்றும் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து ஐந்து காட்டு யானைகளையும் கெத்தை பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். 

இந்நிலையில் இன்று காலை கொலக்கம்பை அருகே உள்ள அரையட்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் யானைகள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பது அரையட்டி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Video Top Stories