Asianet News TamilAsianet News Tamil

“பொதுச்செயலாளர், புரட்சி தலைவர் அண்ணாமலை” பத்திரிகையாளர் சந்திப்பில் திண்டுக்கல் சினிவாசன் பேச்சால் சலசலப்பு

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பிஜேபியை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம் வெளியே வந்தார். தற்பொழுது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வம் தந்த தீர்ப்பாகும். 

ஓ பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம். ஓ.பன்னீர்செல்வமோ, மற்றவர்களோ (பாஜக ) யாரும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தை பொருத்தவரை பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். 

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன் பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு. பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு  கிடையாது என்றார். மேலும் பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக அதிமுகவின் புரட்சித்தலைவர் பொதுச் செயலாளர் அண்ணாமலை நேற்று அறிக்கை விட்டார் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

Video Top Stories