Asianet News TamilAsianet News Tamil

புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு திடீர் விசிட் கொடுத்த ஆளுநர் ரவி; பல மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம். ஆளுநரின் சிறப்பு தரிசனத்தை ஒட்டி பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு.

சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.

நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆரோவில் உதய தினமான பிப்ரவரி 29ம் தேதியான இன்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் கோல்டன் கலரில் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அந்த நினைவிடத்தில் ஆளுநர் ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.

தமிழக ஆளுநர் வருகையொட்டி ஆசிரமத்திற்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதிகளவில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் ஆளுநர் வருகையையொட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தமிழக ஆளுநர் ரவியின் திடீர் வருகையால் அரவிந்தர் ஆசிரம வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. சுமார் அரை மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த ஆளுநர் ரவி புறப்பட்டு சென்ற பிறகு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Video Top Stories