Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்க வேண்டாம்; அதற்கு பதில் இதை செய்யுங்கள் - முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப்பிற்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அதிமுகவினர் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள்களும், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவைகள் தரமானதாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் மற்றும் மடிகணினுக்கு பதிலாக அதற்கு நிகரான தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் அவர்கள் தரமான பொருட்களை வாங்கி கொள்வார்கள். எனவே இனிவரும் காலங்களில் பொருளாக வழங்காமல் மாணவர்களுக்கு பணமாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி இதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Video Top Stories