Asianet News TamilAsianet News Tamil

சாதிவாரி கணக்கெடுப்பை பீகாரில் நிதிஷ் குமார் எடுக்கும்போது இங்கு நீங்கள் ஏன் எடுக்கவில்லை? சீமான் சீற்றம்!!

பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, தமிழ்நாட்டில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை. ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார். மோடி மட்டும் என்ன செய்துவிட்டார் என்று அவர் சொல்லட்டும் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழரின் கோரிக்கை. சமூகநீதி பேசுகிற, பெரியார் மண் என பேசும் இவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்? பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார். எது உண்மையான சமூக நீதி? நிதிஷ் குமார் எடுகும்போது, நீங்கள் ஏன் எடுக்க தயங்குகிறீர்கள்.

எங்களை வஞ்சித்து தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக எடுக்க மறுக்கின்றனர். ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என அண்ணாமலை சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளா மோடி என்ன செய்தார். ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ராஜராஜசோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துவும் இல்லை. வரலாற்றை படிக்க வேண்டும். அவர் கட்டிய கோயில் சைவக் கோயில் என வரலாற்று குறிப்பில் உள்ளது. அவர் சைவ மரபினர் என்று தான் உள்ளது. எனவே நாங்கள் வீர சைவர்கள் தான். எங்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்காதீர்கள்.

வள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள். இல்லையென்றால் சமூக நீதி பற்றி பேசுவதை விடுங்கள். யாரையும் ஏமாற்ற மாட்டோம், யாரிடமும் ஏமாற மாட்டோம். பீகார் எந்த வழியை பின்பற்றியதோ அதே போல் இங்கும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். இசைஞானி இளையராஜா, ஈடு இணையற்ற சாதனை புரிந்தவர். இளையராஜாவுக்கு தலித் அடிப்படையில் எம்.பி பதவி கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். அதை இளையராஜா நிராகரித்து இருக்க வேண்டும்'' என்றார்.

Video Top Stories