Asianet News TamilAsianet News Tamil

தமிழக மீனவர்களின் மானசீக ஹீரோ சுஷ்மா சுவராஜ்.....சோகக் கடலில் மூழ்கினர்..! வீடியோ

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமான இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமான இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு ஹீரோ போல் தன் வாழ்நாள் முழுக்க இருந்தார் என்று சொல்வது மிகையாகாது. அந்நிய சக்திகளால் மீனவர்கள் சில சமயம் அநியாயமாகக் கொல்லப்பட்டபோது ‘அம்மா சுஷ்மா சுவராஜ் வராமல், அவர் சொல்லாமல் எங்கள் மீனவனின் உடலை வாங்கமாட்டோம்’என்று மீனவர்கள் அவருக்காக, அவரது நீதிக்குரலுக்காகக் காத்திருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

அவர் தமிழக மீனவர்கள் மீது எந்த அளவுக்கு நேசம் வைத்திருந்தார் என்பதற்கு, இறப்பதற்கு மூன்று மணி நேரங்கள் முன்பு கூட மீனவர்களுக்கு ஆதரவாகப் போட்ட ட்வீட்டே ஆதாரம்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை எடுப்பது, தாக்குவது என்பது தொடர்கதையான நிகழ்வாக இருந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக் கூடியதும், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து தமிழக எம்.பி-க்கள் மைத்ரேயன், டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோர் விவாதத்தை எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளைத் திரும்பப் பெறவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதால், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்யப்படும் நிகழ்வு குறையும்’என்று தனது ஆதரவுக்கரத்தை நீட்டினார்.

 பின்னர் ஒரு சமயம் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, தமிழக மீனவர்களை அழைத்துக் கொண்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, 29 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 103 படகுகளை விடுவிக்கவும், தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பிரச்சினைக்கு   5கட்டத் தீர்வை அறிவித்த சுஷ்மா முதல் கட்டமாக 29 மீனவர்களையும் 103 மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக இலங்கை தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஒருமுறை பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மீன்பிடி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவர்கள் 15 பேரும் ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக மூன்று படகுகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஈரான் நாட்டு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பான தகவல் அறிந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கைதான தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன் பலனாக அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை  சுஷ்மா சுவராஜ் அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில்  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்த மீனவர்கள்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேரில் வந்தால் மட்டுமே வாங்குவோம் என்று பிடிவாதம் பிடித்து அவர் வந்த பிறகே உடலை வாங்கினர். அந்த அளவுக்கு அவர் மீது தமிழக மீனவர்கள் ஆழ்ந்த பற்றுதலையும் நம்பிக்கையையும் வைத்திருந்தனர்.

இப்படி சுஷ்மா தமிழக மீனவர்களுக்காக ஆற்றிய சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் அவரை தமிழக மீனவர்களின் மான சீக ஹீரோ என்று அழைத்தாலும் அதில் மிகையில்லை.

Video Top Stories