Asianet News TamilAsianet News Tamil

மதத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வைவிட மதிப்பெண்களால் ஏற்படுவதுதான் பாதிப்பு அதிகம்..! வெகுண்டெழுந்த கமல் வீடியோ..

இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும்...

தனது ட்விட்டர் பதிவுகளில், தேர்தல் சமயத்தில் வெளியிட்டதுபோல் வீடியோ பதிவுகள் வெளியிடத்துவங்கியிருக்கும் கமல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு என்கிற நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து,’இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது.மாறாக குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்'என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்னர் கமல் வெளியிட்ட அப்பதிவில்,...ஒரு தும்பியுடைய வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு  கொடுமையான‌ விசயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும் சுமையைக் கட்டி ‌வைப்பது.இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும்...

இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது.மாறாக குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.ஜாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. 

இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது ஒரு குழந்தை இந்த சமூகத்துல வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி போகும்.நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு மட்டும் தான் முக்கியக் காரணமாக இருக்கும்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன்தராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இதற்கு பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும்  நீங்கள் கவனம் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை நமதாகும்...! என்று பேசியிருக்கிறார் கமல்.

Video Top Stories