சூதாட்ட சர்ச்சை.. ஷகிப் அல் ஹசனுக்கு தடை..?
karthikeyan V
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில், ஊதிய உயர்வை வலியுறுத்தி ஷகிப் அல் ஹசன் தலைமையில் சீனியர் வீரர்கள் சிலர், இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆடமாட்டோம் என அடம்பிடித்து ஸ்டிரைக் செய்துவருகின்றனர்.
அதனால் ஷகிப் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் கலந்துகொள்வது சந்தேகம் தான் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த வீரர்களுடன் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சீனியர் வீரர்களுடன் இந்தியாவிற்கு வந்தாலே இந்தியாவை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கையில், அவர்கள் இல்லாமல் இந்தியாவிற்கு வந்தால் மரண அடி வாங்கிவிடும்.
ஏற்கனவே இந்த பிரச்னை இருந்துவரும் நிலையில், ஷகிப் அல் ஹசனுக்கு 18 மாதங்கள் வரை ஐசிசி தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஷகிப் அல் ஹசனை சூதாட்டத்தில் ஈடுபடும்படி, இடைத்தரகர் ஒருவர் அணுகியுள்ளார். ஆனால் ஷகிப் அல் ஹசன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். சூதாட்டத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ஷகிப். ஆனால் இந்த விஷயத்தை ஐசிசிக்கு அவர் தெரியப்படுத்தவில்லை. அவர் சூதாட்டத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்திருந்தாலும் கூட, இப்படி ஒரு விஷயம் நடந்ததை ஐசிசியிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை செய்ய ஷகிப் அல் ஹசன் தவறிவிட்டார்.
இந்நிலையில், அந்த இடைத்தரகரின் போன் கால்களை ரெக்கார்டு செய்து, ஐசிசி பரிசோதித்ததில் அவர் ஷகிப்பை தொடர்புகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த தகவலை ஐசிசிக்கு தெரியப்படுத்தாதற்காக 18 மாதங்கள் வரை ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.