கணவனின் கண்முன்னே மனைவி கற்பழிப்பு; இழி செயலில் ஈடுபட்ட 5 பேருக்கு இதுதான் தண்டனை...
நாமக்கல்
நாமக்கல்லில் கணவன் கண்முன்னே மனைவியை கற்பழித்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் 33 வயது நிரம்பிய பெண் ஒருவர் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கிழங்கு ஆலையில் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ற கணவன் நீண்டநேரம் வீடு திரும்பாததால், அவரை தேடி ஆலைக்கு அந்த பெண் சென்றார்.
அதன்பின்னர் அவர் கணவரை அழைத்துக் கொண்டு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் போதகாபட்டி சுடுகாடு அருகே சென்றபோது, அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.
பின்னர், திடீரென அந்தக் கும்பல் கணவரை சரமாரியாக தாக்கிவிட்டு, கணவரின் கண்முன்னே மனைவியை அருகில் இருந்த முட்புதரில் வைத்து கற்பழித்தது.
இந்தச் சம்பவம் குறித்து இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த ஜெயசூர்யா (22), கணேஷ்குமார் (25), அஜித் (21), பிர்லா (25), ராஜேஷ் (21) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் சுசீலா வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி, "குற்றம் சாட்டப்பட்ட ஜெயசூர்யா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது" என்று நீதிபதி இளங்கோ தீர்ப்பு அளித்தார்.
இதனைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இழி செயலில் ஈடுபட்ட பிள்ளைகளை எண்ணி கதறி அழுதனர்.
இவர்களில் ஜெயசூர்யாவுக்கு ரூ.16 ஆயிரமும், மீதமுள்ள 4 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பலத்த காவல் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.