இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அனுமதிக்க கூடாது – மருத்துவர்கள் உண்ணாவிரதம்…
நாகப்பட்டினம்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அனுமதிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் நாகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கச் செயலாளர் ராஜமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் சுந்தரராஜன், பொருளாளர் பத்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“இருபது ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வரும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய - மாநில அரசுகள் திருத்தம் செய்யவோ, ரத்து செய்யவோ அனுமதிக்கக் கூடாது.
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் பணி செய்வதை உறுதிபடுத்த வேண்டும்.
திருவாரூர், நாகை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறையை முன்னேற்ற உதவியாக இருந்த தொடர்புடைய மாவட்டங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பில் வழங்கப்பட்ட சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் முறையை பாதுகாக்க வேண்டும்.
இளங்கலை மற்றும் முதுகலை பட்ட மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 அரசு மருத்துவமனைகள், 54 ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவர்கள் பங்க்கேற்றனர்.
போராட்டத்தின் முடிவில் முன்னாள் மாவட்ட பொருளாளர் மருத்துவர் சிவகுமார் நன்றி தெரிவித்தார்.