இல்லத்தரசிகளை தடுமாற வைத்த தக்காளி… தாறுமாறான விலை உயர்வு…!
தமிழகத்தில் திடீரென தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் திடீரென தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் வண்டி, வண்டியாக தக்காளிகள் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டன. போதிய விலை இல்லை, ஆள் கூலி, வண்டி வாடகை கட்டுபடியாகவில்லை என்று கூறிய விவசாயிகள் அவற்றை சாலையோரங்களில் கொட்டி சென்ற செய்திகள் வெளியாகின.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்… ஒரு கிலோ தக்காளியின் விலை 2 மடங்காகி விட்டது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 50 ரூபாயை கடந்துவிட்டது.
கடந்த வாரம் 1 கிலோ தக்காளி அதிகபட்சமாக 25 ரூபாயாக இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி 50 ரூபாயை எட்டி பிடித்து இருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் ஆப்பிள் தக்காளி 45 ரூபாயாக உள்ளது. நாட்டு தக்காளியின் விலை 50 ரூபாயை தொட்டுள்ளது. தொடரும் விலையேற்றம் இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது.
தொடர் மழை, போதிய வரத்து இல்லாத காரணத்தால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதே நிலை தான் என்றும், இந்த விலை உயர்வு இன்னமும் சில வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.