ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது அளிக்கப்பட்ட தொகை ரூ.3,969 கோடி ஆகும். இந்நிலையில் மத்திய அமைச்சகத்தில் இருந்து ரூ.1,421 கோடி வர வேண்டி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் தியாகராய நகரில் மழைநீர் தேங்கி நின்றது. சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, தற்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.