ஐ.டி பெண் ஊழியரை தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது...!
ஐடி பெண் ஊழியரை தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதோடு அவரிடம் இருந்த செல்போன், நகை , ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர், லாவண்யா. இவர் நாவலூரில் ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார். அதனால் சென்னை, பள்ளிக்கரணையை அடுத்த, தாழம்பூரில், தோழியருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இவர் பணிபுரியும் நிறுவனம், ஈக்காட்டுதாங்கலில் உள்ள தங்களது மற்றொரு நிறுவனத்திற்கு, லாவண்யாவை தற்காலிகமாக இடமாற்றம் செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த பிப்.13 ஆம் தேதி ஈக்காட்டுதாங்கலில் இருந்து தாழம்பூர் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் அதிகாலை 2.30 மணியளவில் லாவண்யா சென்றுகொண்டிருந்தார்.
தாழம்பூர் அருகே அரசன் கழனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர்கள் சிலர் லாவண்யா மீது தாக்குதல் நடத்தி முட்புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற லாவண்யாவை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவர் இறந்ததாக நினைத்து நகை மற்றும் இரு சக்கர வாகனத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இந்நிலையில், அந்த வழியாக கோயம்பேடு சந்தைக்கு செல்வோர், லாவண்யாவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து நேற்று லாவண்யாவுக்கு நினைவு திரும்பி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தாக்குதல் நடத்தியவர்கள், முகத்தில் துணி கட்டி இருந்ததால், இருட்டில் லாவண்யாவால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. ஆனால், தன் மீது தாக்குதல் நடத்தி, கொடூரமாக நடக்க முயற்சித்தவர்களின் குரலை, ஏற்கனவே கேட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.