தப்பு பண்ணுனா அடிச்சு சொல்லி குடுங்க சார்.! பள்ளியில் தனது மகனை சேர்த்து ஆசிரியரிடம் பிரம்பு கொடுத்த பெற்றோர்
பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிப்பதாக கூறி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து வரும் நிலையில் புதிதாக பள்ளியில் சேர்ந்த தனது மகனை நன்றாக படிக்க வைக்க பிரம்பு கம்புடன் உறுதிமொழி பத்திரத்தை ஆசிரியரிடம் பெற்றோர் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை
ஆசியர்கள் அடிக்கிறார்கள், திட்டுகிறார்கள் எனக்கூறி மாணவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வு அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அச்சமடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதையே தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி என்ற தம்பதியினர் இவர்களது மகனான 4 வயதுடைய சக்தி என்ற சிறுவனை இன்று மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்த்தனர்.
அடிக்க பிரம்பு கொடுத்த பெற்றோர்
அப்பொழுது 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர். ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்