தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை விட்டு முற்றிலுமாக வடகிழக்கு பருவமழை விலகியதற்கு பின்பு தான், அடுத்தடுத்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் தென் கேரளாவிலிருந்து வட உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தூத்துக்குடி ,கன்னியாகுமரி ,தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இன்று முதல் வருகிற 5ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 , குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். அதேசமயம் மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.