தமிழக  மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைக்  கண்டித்து  பிப்ரவரி 11 ஆம் தேதி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக  மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 11 ஆம் தேதி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் லட்சக்கணக்கான மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். காலம் காலமாக மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் அவர்களை, அவ்வப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தாக்கியும், மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியும், படகுகளை சிறைபிடித்தும் அட்டூழியம் செய்து வருகிறது.

அப்படி பல்வேறு காலக்கட்டங்களில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட இருப்பதாக இலங்கை அண்மையில் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 7 ஆம் தேதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், பிப்ரவரி 8 ஆம் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகள், பிப் 9 ஆம் தேதி கிராஞ்சியில் 24 படகுகள், பிப் 10 ஆம் தேதி தலைமன்னாரில் 9 படகுகளும் மற்றும் பிப்ரவரி 11 ஆம் தேதி கற்பிட்டியில் 2 படகுகளையும் ஏலம் விட இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பல்வேறு அரசியல் கட்சியினரும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எந்த கோரிக்கைகளும், முயற்சிகளுக்கும் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களின் படகுகள் காலை 9 மணி முதல் ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மீனவர்கள் பிப்ரவரி 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற மீனவர்கள் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.