அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கோரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது கொரோனா தொற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பு ஊசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2ஆம் தவணை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய மெகா தடுப்பு ஊசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவனை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி மெகா தடுப்பு ஊசி முகாம்கள் மூலம் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டன. இந்த நிலையில், அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா நான்காவது அலை வராது என்றும், வந்தாலும் அதனை விரட்ட, மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளதென்றும் தெரிவித்தார். மேலும் கேரளா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனாவில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உருவாகி வருகிறது என்றும் அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
