அக்டோபர் 4ம் தேதி…. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத்துறை சொன்ன ‘ஹேப்பி’ நியூஸ்
வரும் 4ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.
சென்னை: வரும் 4ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத தருணத்தில் 2020-21ம் ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் எப்போது அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என்று மாணவர்களும், பெற்றோர் தரப்பும் காத்திருந்தனர்.
இந் நிலையில் வரும் 4ம் முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படித்த அந்தந்த பள்ளிகளுக்கு சென்று அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
இது குறித்து தேர்வுக்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: மார்ச் 2021, 10ம் வகுப்பு பொது தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழை அனைத்து பள்ளி மாணவர்களும் வரும் 4ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பயின்ற பள்ளி ஆசிரியர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழ்களை பெறுவதற்காக பள்ளிக்கு வரும் மாணவர்களும், பெற்றோர்களும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.