இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டி அடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த இலங்கைக் கடற்படையினர் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது நாகை மீனவர்களின் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள், அதிலிருந்த 21 பேரையும் சிறைபிடிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

ஏற்கனவே 56 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு பின்பும் தாயகம் திரும்பாத நிலையில், தற்போது 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு விசைப்படகையும் கைப்பற்றி, 21 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை மீனவர்கள் பிடித்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேருக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 21 மீனவர்களையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.