அரசு அலுவலகத்தில் செக்ஸ் டார்ச்சரா? - விரைவில் இணையம் மூலம் பெண் ஊழியர்கள் புகார் அளிக்கலாம்
அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு உயர் அதிகாரிகள், சக அலுவலர்கள் மூலம் பாலியல் தொந்தரவுகள், சீண்டல்கள், இரட்டை அர்த்த பேச்சுக்கள் இருந்தால், அவர்கள் இணையதளம் மூலம் புகார் அளிக்கும் தளத்தை இம்மாதம் மத்தியஅரசு தொடங்க உள்ளது.
மத்தியஅரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அச்சமின்றி பணிபுரியவும், புகார்களை ஆன்-லைனில் தெரிவிக்கவும் இந்ததளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை அளிக்கவும் தனியாக ஒரு தளத்தை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மத்தியஅரசில் 30.87 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள், இதில் 10.93 சதவீதம் பெண்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றபோது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைஅமைச்சர் மேனகா காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ மத்தியஅரசில் பணிபுரியும் பெண்கள் பாலியல்ரீதியான சீண்டல்கள்,தொந்தரவுகளுக்கு உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் மூலம் ஆளானால் அதுகுறித்து புகார் அளிக்க இணையதளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தை இம்மாதத்தில் வெளியிட இருக்கிறோம். எங்கள் அமைச்சகத்துடன் இணைந்தே இந்த தளம் செயல்படும்”எனத் தெரிவித்தார்.