கௌத்தி மலையில் கிடைக்கும் கனிம வளங்கள்தான் பசுமை வழிச் சாலையின் குறியா? விளக்கும் ஆட்சியர்...
திருவண்ணாமலை
கௌத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை குறிவைத்தா சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது? என்ற கேள்விக்க்கு திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி விளக்கமளித்துள்ளார்.
தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகியவற்றை இணைக்கும் பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிற நகரங்களுக்கு துரிதமாக கொண்டு செல்ல இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று சொல்கிறார்கள்.
இந்தச் சாலையின் வடிவமைப்பில் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதி கூடுமான வரை தவிர்க்கப்பட்டு இந்தத் திட்டத்தின் கீழ் தோராயமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 18 எக்டேர் பரப்பு வன பகுதியில் சாலை அமைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு மரங்கள் அகற்றப்படும். அதன்பிறகு இந்த சாலையின் இருபுறமும் சுமார் 3 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படுமாம்.
ஆனால், இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார், அதில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கௌத்தி மலை பகுதிக்கும், பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கும் இடையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
ஏற்கனவே, நீதிமன்றத்தில் கௌத்திமலையில் இருக்கும் கனிம வளங்களை குறிவைத்து சாலை அமைக்கும் இந்த வளங்கள் எடுக்கப்படலாம் என்று மனு போடப்பட்டது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கும் முடிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இந்த சாலை அமைக்கும் திட்டம் கௌத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது.
இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள மொத்தம் 860 ஹெக்டேர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் 155 எக்டேர், தனியார் நிலங்களில் நன்செய் நிலங்கள் 100 எக்டேர், புன்செய் நிலங்கள் 605 எக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் பொதுமக்க ளின் குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்தக் கூடியது. இந்த திட்டம் பொதுமக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் பூரண ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் சந்தித்து, தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மூன்றாம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் மூலம் வரும் தகவல்கள் உண்மையல்ல" என்று அதில் கூறப்பட்டுள்ளது.