Asianet News TamilAsianet News Tamil

அடிதூள்... கம்மி விலையில் தக்காளி... ஸ்டாலின் அதிரடி!! | CMStalin

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Selling tomatoes at pannai pasumai kadai to control inflation
Author
Tamil Nadu, First Published Nov 23, 2021, 8:54 PM IST

சென்னையில் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை கிலோ 200 வரை விற்பனை செய்யப்பட உள்ளதாக காய்கறி மார்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் கோலார் ஆகிய இடங்களில் இருந்து, தமிழக மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து சரிந்துள்ளது. இதனால், ஒரே மாதத்தில் தக்காளி விலை, இரண்டு மடங்காக அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால், வரத்து பெருமளவில் குறைந்து இருக்கிறது. கடந்த வாரத்தில் பாதிக்கு பாதியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்திருந்த நிலையில், நேற்று 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து இருந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 7 லாரிகளும், கர்நாடகாவில் இருந்து இதர லாரிகளிலும் தக்காளி கொண்டு வரப்பட்டன.

Selling tomatoes at pannai pasumai kadai to control inflation

ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருந்து தக்காளி வரத்து இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தக்காளியின் விலை நாளை கிலோ 200 ரூபாய்க்கு இருக்கும் என கோயம்பேடு மார்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒரு கிரேடு தக்காளியின் விலையே 3 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காய்கறி விலை உயர்வால், இல்லத்தரசிகள் காய்கறி வகைகளை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வியாபாரமும் மந்தமாகவே உள்ளது. இந்த நிலையில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. இதனால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Selling tomatoes at pannai pasumai kadai to control inflation

இதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios