ஆர்ப்பாட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித் துறையினர் கூண்டோடு அரெஸ்ட்; கோரிக்கைகளை நிறைவேறுமா?
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் 23 பெண்கள் உள்பட 124 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையினர் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 3-ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக இப்போராட்டம் நீடித்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர் காமராஜ், பணி மேற்பார்வையாளர் சங்க மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிற சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வெங்கடேசன், தேவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாஸ்கர் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.
முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.
சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50% பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.
கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும்
தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்" உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 124 பேரை கைது செய்தனர்.