அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது - ராம் மோகன் ராவ் பல்டி
சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராம் மோகன ராவ் செய்தியாளரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தமிழக அரசை தான் கோபத்தில் விமர்சித்து விட்டதாக கூறியுள்ளார். தனது வார்த்தைகளை வாபஸ் வாங்குவதாக கூறியுள்ளார்.
அவரது பேட்டி:
பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இப்போதும் நான் தான் தலைமைச் செயலாளர்’ என்று கூறியுள்ளீர்களே
எனக்கு ஏற்பட்ட இதய வலியில் கூறிய வார்த்தை தான். எனக்கு அநியாயம் நடந்துள்ளதே என்ற ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது. எனவே அந்த வார்த்தையையும் நான் திரும்பப் பெறுகிறேன். இப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிகச் சிறந்த அதிகாரி. அவர் மீது எனக்கு மரியாதையும், கவுரவமும் உண்டு.
உங்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூட தமிழக அரசுக்கு திராணி இல்லை என்று கூறினீர்களே? ஏன் இந்த ஆவேசம்?
அந்த வார்த்தையை நான் சொல்லி இருக்க கூடாது. 6 நாட்கள் நான் பட்ட மன வேதனை, இதய வலி... அதனால் ஏற்பட்ட ஆவேசத்தில் அந்த வார்த்தையை உபயோகித்து விட்டேன். அரசையோ, முதல்வரையோ அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அரசுக்கு ‘கட்ஸ்’ இருக்கிறதா என்று இரண்டு முறை நான் கூறிய அந்த வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன்.