பூஜை செஞ்சோம் ! மழை வந்திடுச்சு !! மார் தட்டும் அதிமுகவினர் !!
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மழை வேண்டி யாகம் நடைபெற்ற நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்தது.
சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று அதிமுக சார்பில் மழை வேண்டி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் பங்கேற்ற மகா யாகம் நடத்தினர்
இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, மீனம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்ததது.
காஞ்சிபுரம், தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை, வாலாஜாபாத் குன்றத்தூர், திருமுடிவாக்கம், மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை, வந்தவாசி, பொன்னூர், இளங்காடு செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வேலூரில் அரக்கோணம், சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் தேனி,வீரபாண்டி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.
இதே போல் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்