சென்னையில் அதிகாலை முதல் வெளுத்து வாங்கும் மழை… வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்காக அறிகுறியா ?
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தென் மேற்கு பருவமழை முடிந்து கடந்த வாரமே வட கிழக்கு பருவமழை தொடங்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள்தான் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த உடனேயே வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால், பருவமழை தொடங்குவதற்கான சூழல் தென்படவில்லை. அதேசமயம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்காக தொடக்கம்தான் இந்த மழை எனவும் கூறப்படுகிறது.