மெரீனாவில் மீண்டும் போராட்டமா? நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!!!
கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக பரவிய தகவலை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் பைப் லைன்களில் சில நாள்கள் முன்னர் தீடீரென கசிவு ஏற்பட்டது.
இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைடையே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற கல்லூரி மாணவியை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 12-ம் தேதி கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கோவை மாணவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை வஉசி மைதானத்தில் திடீரென கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது, இதையடுத்து மெரினா கடற்கரையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மெரீனாவில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.