பிளாஸ்டிக் பைகளுக்கு இன்று முதல் தடை !! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை தொடக்கம் !!
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று முதல் அமலுக்கு வருகிறது./ தமிழக அரசு இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரரத்னு, சந்தோஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் டீ கப்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று கூட்டத்தில் திட்டவட்டமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.