பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு – நடிகர்களின் பிடிவாரன்டுக்கு எதிரான மனுவுக்கு பிற்பகலில் உத்தரவு...
பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சூர்யா, சரத் உள்ளிட்ட 8 நடிகர்களின் பிடிவாரன்டுக்கு எதிரான மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றம் உத்தரவு பிரபிக்கபட உள்ளது.
கடந்த 2009 ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியானது. அதில் நடிகைகள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
இதனால் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் குறிப்பிட்ட நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய நடிகர்கள் சூர்யா, சரத்குமார், விவேக், அருண் விஜயகுமார், விஜயகுமார், சேரன், ஸ்ரீப்ரியா, சத்யராஜ் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிக கேவலாமாக விமர்சித்தனர்.
இதுகுறித்து ரசாரியா என்பவர் உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை யாரும் ஆஜராக வில்லை. இதையடுத்து சூர்யா, சரத் உள்ளிட்ட 8 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று சூர்யா, சரத், சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்கள் சார்பில் பிடிவாரன்ட்டை ரத்து செய்ய கோரி உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றம் உத்தரவு பிரபிக்கபட உள்ளது.