நீதிமன்றத்தில் சாமியாடிய நிர்மலா தேவி …. தன் மீது குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் செத்துப் போயிட்டாங்க !! உளரிக் கொட்டியதால் பரபரப்பு !!
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்தில் தர்மயுத்தம் மேற்கொண்டதோடு சாமியாடினார். மேலும் தன் மீது குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2018ல் மாணவிகளை தவறான பாதையில் வழி நடத்தியதாக கூறப்பட்டு கைது செய்து சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த பேராசிரியை நிர்மலாதேவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அடுத்த வாய்தா 22 ஆம் தேதி என அறிவிக்கபட்ட பின்பும் தனது கணவர் சங்கரபாண்டி மற்றும் தனது உறவினர்கள் வந்து அழைத்துச்செல்வர் எனக்கூறியும் தனக்கு சாமி வந்துள்ளதாகவும் கூறி தியானத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது போல் கண்களை மூடிக்கொண்டு தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து தான் விடுதலையாகி விட்டதாகவும் தனக்கு எதிராக குற்றம் சாட்டிய மாணவிகள் தூக்குபோட்டு இறந்து விட்டதாகவும் கூறினார்.
நீதி மன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் அங்கு சிறிது நேரம் சாமியாடினார்.
மேலும் நீதிமன்றத்திற்கு வரும்போது தனது முடியை தானே வெட்டி அதை தன் மீது போட்டுக்கொண்டு வந்தார். கடந்த வாய்தாக்களில் அமைதியாக வந்து சென்ற நிர்மலாதேவி இம்முறை அவர் செய்த செயல்கள் நீதிமன்ற வளாகத்தை பரபரப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி காரில் ஏற்றி அருப்புகோட்டைக்கு வழியனுப்பி வைத்தனர். நிர்மலா தேவியின் செய்கையால் நீதிமன்ற வளாகமே பரபரப்பில் ஆழ்ந்தது.