உங்கள திருத்தவே முடியாது !! விழுப்புரம் அருகே கணவர்கள் தண்ணி அடிக்க ரொம்ப தூரம் போறாங்களாம்….மூடிய மதுக் கடைகளை திறக்க மனைவிகள் போராட்டம் !!
விழுப்பரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாக கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்களே பேராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை , மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் கடுமையாக போராட்டம் நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் குடிமக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக நீண்ட தூரம் சென்று கஷ்டப்பபடுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி குடிமக்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில்ஈடுபட்டனர்..
அதே நேரத்தில் டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்திய போலீசார், இது குறித்து உயரதிகாரிகளிம் இப்பிரச்சனையை கொண்டு செல்வதாகவும், அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.
கணவன்மார்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிக்கிறார்களே என எண்ணி அருகிலேயே மதுக்கடைகளை திறக்க கோரி பெண்கயே போராட்டம் நடத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.