உச்சநீதிமன்றத்தில், முல்லை பெரியாறு அணையின் உறுதி தன்மையை சந்தேகம் எழுப்பி கேரள அரசு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இந்நிலையில் மத்திய அரசின் நீர்வள ஆணையம் மற்றும் அணையின் கண்காணிப்பு குழு சார்பில் மத்திய நீர்வள ஆணைய துணை இயக்குனர் ராகேஷ் குமார் கவுதம் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் முல்லை பெரியாறு அணையை மறுஆய்வு செய்வது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுக்குறித்து அண்மையில் அறிக்கை வெளியிட்ட தமிழக நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்திருந்தார். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் காலவாரியான நீர்மட்டம், அணையின் வழிந்தோடி மதகின் கதவுகளை இயக்குதல், அளவு மானிகள் பொருத்துதல், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்து கேரள மாநில நான்கு தனிநபர்கள் 2020 மற்றும் 2021ல் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளுக்கு தேவையான மறுப்பு மனுக்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகள் 15.12.2021 அன்று விவாதத்திற்காக வந்தபொழுது, வாதி பிரதிவாதிகள் ஏதேனும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் 04.02.2022ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என ஆணையிட்டு வழக்கை வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது. இவ்வழக்குகளில் தமிழகம், கேரள அரசுகள் முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு, மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக அரசு அதன் பதில் மனுக்களை உச்சநீதி மன்றத்தில் 06.02.2021, 20.04.2021, 16.11.2021 மற்றும் 14.12.2021 தேதிகளில் தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றமே அதன் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதிகளில் வழங்கிய ஆணைகளில் எஞ்சிய பலப்படுத்தும் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட பின்தான் பிரத்யேகமான நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதன்பின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பணிகளை முடித்தபின்தான் எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட வேண்டுமே தவிர, தற்போது அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய எந்த அவசியமும் இல்லை. அணையின் நீர்கசிவு, சுண்ணாம்பு வெளியேற்றம் இவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகமிக குறைவாகவே உள்ளது. ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும் அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாகும். மத்திய நீர்வள குழுமத்தின் நிலை அறிக்கைக்கான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் 4.02.2022க்குள் தக்க நடவடிக்கைக்காக தமிழக அரசு தாக்கல் செய்யும். நமது நிலைப்பாடு குறித்த தகுந்த வாதங்களை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில், முல்லை பெரியாறு அணையின் உறுதி தன்மையை சந்தேகம் எழுப்பி கேரள அரசு தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் முல்லை பெரியாறு அணையில் சிறு பணிகளை மேற்கொள்ள கூட கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. உபகரணங்களை எடுத்து செல்லகூட முட்டுக்கட்டை போடுகிறது. அணையில் தமிழகத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தும் அதனை ஏற்காமல், மனு தாக்கல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.